”அம்மா -
என் சின்ன வயசுல நான் நடக்கப் பழகி
நாளுங் கொஞ்சம் ஓடினப்போ -
நான் படிச்சுப் பழகி
பாங்குடனே வளரட்டுமின்னு
அஞ்சு வருசம் முடிஞ்சதுமே
அரசாங்கப் பள்ளியதில் சேர்த்துவிட்ட...
நான் அழுதுகிட்டே ஓடிவந்து உன் கைபுடிக்க
கைய ஒதறிவிட்டு காத்தாகப் பறந்து போனே....
அம்மா-
நீ விட்டுப்போன கைபுடிச்சு
பாட்டுபடிச்சு, கத படிச்சு பாசத்தால இருக்கவச்சு.....
அகரம் ஆதியான அன்னைத் தமிழோட ஆங்கிலமும் தான் தந்து
எண்ணிக்காண்பிச்சு......... எண் கணக்கும் சொல்லித்தந்து ..............
ஆகாச அறிவியலும் ஆம்ஸ்ட்ராங்கின் வரலாறும்
பூகோளம் சரித்திரமின்னு புதுசுபுதுசா சொல்லித் தந்து
எனக்கு அறிவும் ஆளுமையும் அன்போட
ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தாங்க பள்ளியில.....
நான்- என்ன ஏது படிக்கிறன்னு எட்டிகூட பாக்கவில்ல......
என் கண்ணு எப்படிப் படிக்கிறயின்னு
ரெண்டாறு வருசத்தில - நீ
ஒரு நாளும் கேட்டதில்ல ....
அம்மா..... நீ என்னக் கேக்காம இருந்தாலும்ம்....... - உன்
நெனப்பெல்லாம் என்னப்பத்தி
எண்ணமெல்லாம் என்னச்சுத்தி.....
ஆசை மகன் படிப்பான்னு அப்பாவும் கண்டுக்கல.....
என் ராசா படிக்கிறான்னு ராப்பகலா கண்முழிச்ச...
பாங்காப் படிக்கிறேன்னு பாடுபட்டு நீ தேய்ஞ்ச....
என்னப் பெத்த தாயி... நீதான் இப்படின்னா....
பள்ளியில ஆசான்கள் எங்கிருந்தோ வந்தாங்க.....
என்னப்பத்தி கேட்டாங்க.... உன்னப்பத்தி கேட்டாங்க....
நல்லாப் படி படின்னு நாள்தோறும் சொன்னாங்க..... அவிங்க
பாரபட்சம் பாக்கவில்ல ஆகிப்புட்டோம் தாயிபுள்ள.....
படிச்சிட்டா பாராட்டு படிக்கலன்னா........ ஒரே பாட்டு....
படிக்கலின்னா அதட்டுவாங்க...
அப்படியும் படிக்கலின்னா முதுகில ரெண்டு தட்டுவாங்க...
உன்னப்போலவே அக்கறை காட்டி.......
பட்டம் பல பெற்றிடனும் பார்புகழ வாழ்ந்திடனும்
ஏற்றம் பல பெற்றிடனும் என்றும் புகழ் நிலைத்திடனும் -என்று
நித்தம் சொல்லிச் சொல்லி , என் மனசில் நிலைச்சிட்டாங்க...
தாயே உன்னை மனதிலெண்ணி,
எங்களுக்குப் பாடம் தந்த ஆசான்முன்
உறுதிமொழி கூறுகிறோம்.
உங்கள் எல்லோரது எண்ணங்களும் திண்ணமாய் நிறைவேறும்....
தித்திப்பாய்க் களி கொடுக்கும்......
கற்றகல்வி வெற்றிக்கனியை வாழவுக்கு வித்தாய்த் தரும் தருணம்....
பொதுத்தேர்வில் - வெற்றிக் கனியை எட்டிக்களிப்போம்........
------------------------------------------------ வெற்றி நிச்சயம்........................................................